சவுதி-அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுப்பு எதிராக அமெரிக்கா – வொஷிங்டனில் உள்ள நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்ய உத்தரவிட்டதாக அவருக்கு எதிராக டாவ்ன் (Democracy for the Arab World Now) என்ற கஷோக்ஜி நிறுவிய அமைப்பின் ஊடாக நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
கஷோக்ஜி கொல்லப்படும் முன்பு அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது காதலி ஹாடீஜா ஜெங்கிஸ் இதில் முக்கிய மனுதாராராக உள்ளார்.
கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதன் மூலம் தனக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக துருக்கியப் பிரஜையான ஹாடீஜா தனது மனுவில் கூறியுள்ளார்.
கஷோக்ஜி கொலையால் தங்கள் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டாவ்ன் அமைப்பும் மனுவில் தெரிவித்துள்ளது.
59 வயதான ஜமால் கஷோக்ஜி - ஆண்டில் தனது தாய் நாடான செளதியில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். இவர் சவுதி அரச குடும்பத்தை தீவிரமாக விமர்சித்து வந்தவராவார்.
துருக்கிய பிரஜையான ஹாடீஜா ஜென்கிஸை திருமணம் செய்ய முடிவு செய்த ஜமால் கஷோக்ஜி, முதல் திருமணத்தின் மணமுறிவுக்கான ஆவணங்களைப் பெற 2018-ஆம் ஆண்டு ஒக்டோபர் 2-ஆம் திகதி துருக்கி - இஸ்தான்புல்லில் உள்ள செளதி துணைத் தூதரகத்துக்கு சென்றார்.
நீண்ட நேரத்துக்குப் பிறகும் அவர் வெளியே வராத நிலையில், தூதரகத்துக்கு வெளியே காத்திருந்த அவரது காதலி ஹாடீஜா துருக்கி அரசின் கவனத்துக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான இரகசிய உரையாடல்களை வைத்து கஷோக்ஜி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.
சவுதி இளவரசரின் உத்தரவின் பேரிலேயே இவர் தூதரகத்தக்குள் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.